Thursday, January 17, 2019

பேசினாலும் ஏசினாலும்
பார்த்தாலும் மறுத்தாலும்
நேசிப்பின் சுவாசம் நீ
நெஞ்சத்தின் வாசம் நீ

எனை நீ மறந்தாலும்
உனைநான் மறவேனே
கனவாய் ஆனாலும்
காலங்கள் போனாலும்
நினைவெலாம் நீதானே
நித்தம் உன்குரல்தானே
நெஞ்சினிக்கும் தேன் தானே!

பிரியம்நீ என்றாலே
பெருமகிழ்ச்சி எனக்குள்ளே
திறவாய் உன்மனதை
தித்திக்கும் சிரிப்பாலே
விட்டு விட்டு சிரிக்கையிலே
விடாமல் பற்றிக்கொண்டு
கட்டுப்பட்டு கடக்குறேன்டி
உன் கலகல சிரிப்புக்குள்ளே!

Saturday, February 4, 2012

சொல்ல ஒரு சொல்லின்றி .........................

எத்தனைக் காலம் நித்திரை இழந்தேன்
என்பதை நீயும் அறிவாயா?
புத்தனைப் போலே இத்தனை இழந்தும்
புன்னகை தொலைத்தேன் புரிவாயா?
சித்தனைப் போலே இத்தரை வாழ்தல்
சின்ன எளிய செயலா சொல்?
அத்தனை சொல்லும் ஆழ்குள நெஞ்சில்
அன்பே ஒருசொல் கிடைக்கவில்லை
பித்தனைப் போலே பிதற்றியே நானும்
பிறிதொரு சொல்லும் பிறக்கவில்லை
மொத்தமாய் எவனோ குத்தகை எடுத்து
முகிலில் அலைந்திட விட்டானா?
கத்தியே நானும் கவிதை படைத்தும்
கருணை இல்லையோ தமிழ் தாயே
புத்தியில் புகுந்து புதுசொல் கொடுத்திடு
புத்துயிர் அடையும் என்காதல்

Saturday, January 7, 2012

தானே............

ஆண்டிறுதியில்
ஒரு
அவலம் அறங்கேறியது.

தானே வந்த
தானே புயலால்
தவித்தது
மரங்களும் மக்களுமா?
நானுந்தான்.

காதல் சிறு பஞ்சை
காத்து வைத்திருந்த நெஞ்சை
காததூரம் வீசியெறிந்து
கலங்கடித்துவிட்டது.

உள்ளுக்குள்
உருண்டு திரண்ட
உன்
நினைவுகளை
உலுக்கிவிட்டுச் சென்றது.

கரையைத் தாண்டி
கான்கிரீட் சாலைகளில்
கற்களை வீசியதைப் போல்
மனத்தில் தங்கியிருந்த
நிகழ்வுகளின் குவியல்களை
வெளிக்கொணர்ந்து
வெறுப்பேற்றிச் சென்றது

வானை நோக்கி
வளர்ந்த பெருமரங்கள்
ஆனை சரிந்ததுபோல்
அடியோடு பெயர்ந்தபோது
நம் காதல் மரம் சாய்ந்த
நாட்களையே நானுணர்ந்தேன்

பசுமையாய் இருந்த எதையும்
பார்க்க சகிக்காத
தானே புயல்
பழி தீர்த்துக் கொண்டதுபோல்
பசுமையான
உன் சார்ந்த தருணங்கள்
பறந்துவிடாமல்
பாதுகாத்துக் கொண்டிருக்கின்றாய்.

தானே வந்ததுபோல்
நீயும்
தானே தான் வந்தாய்

தனியாய்
புலம்பவிட்டு
தடம்பதித்துச் சென்றாய்....................

Thursday, July 28, 2011

அலையழகி

ஆண்டுக்கொரு முறைவரும்
ஊர்த் திருவிழா

ஆனால்
ஆண்டுமுழுவதும்
உன்
அவதார நாள்
நோக்கியே
என்
அத்தனை அடிகளும்.

நீ
என்னில் விதைத்த
பதிவுகள்
பதியமாய்
நெஞ்ச நிலத்தின்
வெளிமுழுவதும்
விரவிக் கிடக்கின்றன.
அலைக்கும்
நம்மிருவருக்கும்
அப்படியொரு நெருக்கம்.

நீ
அலைத்தாயின்
அடிமடியில்
அருந்தியவள்
நான்
அலைத்தாயின்
ஓரப்பார்வையில்
உயிர்வளர்ந்தவன்.

அதனால் தானோ
என்னவோ
அப்படியொரு ஈர்ப்பு
உன்
அகலவிரிந்த
அணு விழிகளின்
மீதெனக்கு.

ஆண்டுகள் பலவானாலும்
மீண்டும் மீண்டும்
மீள்பார்வையில்
உன்
பார்வை மட்டுமே.

வீட்டுக்கொரு
மரம் வளர்த்தால்
ஊரே காடாகும்.
உள்ளம் முழுக்க
உன் நினைவுகள்
எள்ளுக்கும் இடமின்றி
எத்தனை பதிவுகள்.

நெஞ்சக் காட்டுக்குள்
நீக்கமற நிறைந்திருப்பவை
உந்தன் நினைவுமரங்கள்

யாராலும் வெட்ட முடியாத
காதல் தோப்பின்
கனவு மரங்கள்.

பழகிய நாட்களின்
பசுமை போர்த்திய
பரந்த சொல்வெளிகள்.

அழகிய உடைகளின்
அணிவகுப்பான
மலர்ச்செடிகள்.

கண்ணசைவின்
காந்தப்புல விசைகள்.

நிமிர்ந்து நடக்கையில்
நின்
நெஞ்சை விட்டு
நீள்விழி நோக்குவேன்.

கொஞ்சம் குனிந்து
வஞ்சகம் செய்யாமல்
வாரி வழங்கிடுவாய்
பார்வை பருக்கைகளை.

எலிக்கறித் தேடும்
ஏழை உழவனுக்கு
களி கிடைத்தார்போல்
களிப்பெய்திடுவேன்.

கல்லூரி காலத்தின்
கொடைக்கானல் செலவு
உள்ளூறி உறைந்து கிடக்கையில்
நல்ல வேலையாய்
நாமிணைந்து செல்ல
இன்னுமொரு வாய்ப்பு.

ஒண்றாய் உண்டு
ஒண்றாய் கலந்து
உறவாடி மகிழ்ந்த
உன்னத கணங்கள்.

உன்
பிறந்தநாள்
என்றாலே எனக்கு
கோடை விடுமுறையைக்
கொண்டாடும்
குழந்தையின் மகிழ்ச்சி.

ஆடை மறந்து
அடைமழையில்
ஆடித் திரிந்திடும்
அம்மண மகிழ்ச்சி

சோடி சேராவிட்டாலும்
சோகத்தை பங்கிடும்
சுகமான மகிழ்ச்சி.

உன்னை
உன் நினைவுகளை
என்னால் எப்போதும்
கண்ணகல முடிவதில்லை.

வளர்பிறையென
வளமும் நலமும்
உனைச்சேர
குளிர் நிலவென
குழந்தை, துணையும்
உனைச் சூழ
களிப்பினினில்
காலமெல்லாம்
நீ வாழ்க
வாழ்க வாழ்க

Wednesday, July 28, 2010

பிறந்த நாள்


நீ
பிறந்த நாள்
என்
வாழ்க்கை மலர்ந்த நாள்.

எந்த நாளும்
நான்
இப்படி மகிழ்ந்ததில்லை.

உன்
பிறந்த நாள்
பிறப்பதற்கு முன்
எனக்கு விடிந்துவிடுகிறது.

ஓராண்டுக்கு முன்பே
நான்
புத்தாடை எடுத்துக்கொள்கிறேன்.

அடுத்த ஆண்டென்பது
என் அகராதியில்
அடுத்த நொடி.

நீ
எடுத்தடி வைத்தபோது
என் மனத்தில்
எத்தனை அதிர்வுகள்.

ஆழ்மன நாட்காட்டியில்
அப்படியே
அந்தப் பதிவுகள்.

பிறப்பொன்றும்
இறப்பதற்காக அல்ல
மறக்காமல்
உன்னை
மனத்தில் இருத்திக்கொள்ளவே.

வாழ்த்துச் சொல்ல
வார்த்தைக் கிடைக்கவில்லை
வாழ்கவென்று
தனக்குத்தானே சொல்லிக்கொள்வது
பைத்தியக்காரத் தனமல்லவா?

எத்தனைப் பேரைச்
சந்தித்திருப்பேன்
நீ மட்டுந்தானே
என் நெஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டாய் .

சித்திரை நிலவாய்
அமாவாசையிலும்
முத்திரை பதித்தாயே.

கவிதை
எழுத உட்கார்ந்தால்
அருவியென அளிப்பாயே.

உன்னை எழுதுதற்கு
ஏன்
ஓரவஞ்சனை செய்கிறாய்?

பிள்ளையார்
சுழி போட மறுப்பவன்
உன்
பேரெழுதியல்லவா
தொடங்குகிறேன்.

நீ
இல்லாவிட்டால்
என்
கவிதைப் புத்தகம்
வெறும் காகிதம் தான்.

அடிக்கடிப் பேசுகிறாய்
அலைபேசியில்
அலுவல் மொழி.

ஆன்மாவோடு
பேசுகிறேன்
அன்புமொழி.

கண்ணிலே அன்பிருந்தால
கல்லிலே தெய்வம் வரும்
பாடினாய்
தேடினேன்.

கூடு வேறு
வீடு வேறு
குடியிருக்கும்
உயிர் ஒன்று.

அருகருகே இருந்தாலும்
அணுவளவும்
நாம்
அத்துமீறியதில்லை.

நித்திரையிலும்
நிழலாடும்
நின் நிஜம.

பூக்களின் வாசம்
உன் புன்னகை நேசம்

நாக்கினில் வந்து
நடுத்தொன்டை இறங்கும்
வாக்கினை இழந்தேன்
உனை
வாழ்த்திடமுனைந்து.

ஈக்களே அமரா
இளம் பூங்கொத்தை
எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன்.

உற்றத் துனையோடும்
உயிர் குழந்தைகளோடும்
கற்கண்டு தமிழ்போல
காலமெல்லாம் வாழ்க நன்றே







Thursday, April 29, 2010

மரணம்

அன்பை
ஆராதிக்காமல்
அடக்கிட முயன்றால்
ஆபத்து சூழந்து
அவசியம் வரலாம் மரணம்.

சேர்வதும் பிரிவதும்
தெய்வத்தின் செயலானால்
யார் விரும்பி ஏற்பார்
காதலர் பிரிவை விரும்பும்
கடவுளை.

உயிரின் தோற்றமே
காதலின் தோற்றம்

காதலின் வலிமையே
சாதலின் எளிமை

நெஞ்சுக்குள் குடிபுகுந்த
நேசவுயிர்
ஒருபோதும்
சென்றுவிட முடியாது
நினைத்தபடி தனியாக.

மரணங்கள்
காதலை
வாழவைத்துக் கொண்டிருக்கின்றன
மனிதன் தோன்றியது முதல்.

வாழும் புவியில்
வாழவே பிறந்தோம்
வாழட்டும் காதல்
மரணத்தை வென்று..

Tuesday, April 13, 2010


இன்றும் உன்னைச் சந்தித்தேன்
உணவகத்தின் கடைசி தளத்தில்
நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.
உன் முகம் பார்த்து
மலர்ந்தேன்.
அதரம் சிவந்து
என்னை ஆராதித்தாய்.

வாங்க என்று
ஓசையில்லாமல்
ஆசையாய் சொன்னாய்.

சிரிப்பு சிந்திய
மகிழ்ச்சியில்
நான்
சில கணங்கள்
கான்கிரீட் தூணானேன்.

இழுத்து விட்ட
ரப்பரென
மீண்டேன்
அடுத்த நொடி.

உன்னோடு சேர்ந்து
உணவருந்த
மற்றுமொரு வாய்ப்பு.

உன்னைக் கண்ட மகிழ்ச்சியில்
மனது நிரம்பி வழிந்தது
மழையைக் கண்ட பாலையாய்.

மின்வெட்டு போல
உன் வரவு புதிரானது
கண்கட்டு வித்தையாய்
உன்
தரிசனம்.